உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகள் மைசூருவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனப்படும் தசரா ஊர்வலம் அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெற உள்ளது. தசரா ஊர்வலத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அலங்கார அணிவகுப்பு வாகனங்களின் ஊர்வலத்தையும் அரண்மனை முன்பிருந்து பார்வையிட தங்க அட்டை வழங்கப்பட உள்ளது. ரூ.2 ஆயிரம் மதிப்பிலான இந்த தங்க அட்டையை வாங்குபவர்கள் அரண்மனை முன்பு அமர்ந்து ஊர்வலத்தை நேரில் கண்டுகளிக்கலாம் என மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தசரா ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட தென்மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
Advertisement
இதுகுறித்து கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட தென்மாநில முதல்-மந்திரிகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முடிவு செய்வார் என தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தென்மாநில முதல்-மந்திரிகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பார்களா என்பது குறித்து டி.கே.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறினார்.