மூன்று மாதங்களுக்குப் பிறகு 80 அடியை கடந்த மேட்டூர் அணை; விவசாயிகள் மகிழ்ச்சி
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், அங்குள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பிய நிலையில், கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றின் வழியாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளிக்கேற்ப, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் மாற்றப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில், அந்த அணையில் இருந்து வினாடிக்கு அதிகபட்சமாக 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக பதிவாகியுள்ளது.மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.நீர்வரத்து அதிகரித்ததன் விளைவாக அணையின் நீர்மட்டம் 80 அடியைத் தாண்டியுள்ளதால், மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.