தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் அவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.இந்த முறை மீன்பாடு சிறப்பாக இருந்ததால், மீனவர்கள் அதிக அளவில் பெரியமீன்களைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். இதன் காரணமாக திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன.அதே நேரத்தில், தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.
Advertisement
இதனால் மீன் வாங்குவதற்காக வந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வரத்து அதிகரித்து, தேவை குறைந்ததால் மீன்களின் விலையும் சற்று சரிந்தது.திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையிலும், விளை மீன் கிலோ ரூ.600 வரையிலும், பாறை மீன் கிலோ ரூ.350 வரையிலும், ஊளி மீன் கிலோ ரூ.400 வரையிலும், நண்டு கிலோ ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.மீன்களின் விலை குறைந்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச் சென்றனர். அதேபோல், நல்ல மீன்பாடு கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.