மதுரையில் ஹெலிகாப்டர் சேவை: 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்லலாம்
மதுரையை மையமாகக் கொண்டு சுற்றுலா மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் வகையில் தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூரை சுமார் 30 நிமிடங்களில் சென்றடையலாம்.மதுரை தற்போது சுற்றுலா நகரமாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இங்கிருந்து ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம், மதுரை விமான நிலையம் அருகேயுள்ள கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த சேவை மூலம் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு சுமார் 30 நிமிடங்களிலும், ராமேசுவரம் மற்றும் கொடைக்கானலுக்கு சுமார் அரை மணி நேரத்திலும் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மதுரையில் இருந்து சென்னையை 1 மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவை சுமார் 1½ மணி நேரத்திலும் சென்றடையலாம்.
இந்த ஹெலிகாப்டர் சேவைக்கு அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேர ஹெலிகாப்டர் பயணத்துக்கு சுமார் ரூ.1.60 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.