கேரள முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் ஆகியோர் மீது லஞ்சப் புகார் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக, வீணாவுக்கு சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் எந்தவித சேவையும் வழங்காமல், சி.எம்.ஆர்.எல். கனிமவள நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் எம்.எல்.ஏ. ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் விசாரணையில் இருந்தபோதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மே 27-ந்தேதி பினராயி விஜயன் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பினராயி விஜயன், வீணா விஜயன் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கேரள டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பினராயி விஜயன் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது வீணா விஜயனின் ரகசிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டைரியில் ஹவாலா வழியாக துபாய்க்கு பணம் அனுப்பியது தொடர்பான தகவல்களும், துபாயில் நிறுவனம் ஒன்றை தொடங்க வீணா விஜயன் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த பதிவுகளும் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ஹவாலா முகவர்களுடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்களும் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
Advertisement
டைரியின் 3-வது பக்கத்தில் செப்டம்பர் 17, 2024 என தேதியிடப்பட்ட பதிவு ஒன்றும் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து ரூ.85 லட்சம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், இதில் 3.49 லட்சம் ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்கள் (அன்றைய இந்திய மதிப்பில் ரூ.79.60 லட்சம்) துபாயில் பைஜாஸ் என்பவரால் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் நிறுவனம் ஒன்றை தொடங்குவதற்காகவே இந்தப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வீணா விஜயன் ஏற்கனவே விசாரணையின்போது தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதனை அமலாக்கத்துறை மறுத்துள்ளது. பினாமி பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி, இந்தியாவில் லஞ்சம் மூலம் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை அதில் முதலீடு செய்வதே இதன் நோக்கம் என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், முகமது ரியாஸுக்கு நெருக்கமானவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலங்களும் இந்த விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதற்கிடையே, முகமது ரியாஸின் நண்பரான பெபீஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கோழிக்கோட்டில் உள்ள அவரது வங்கி லாக்கரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு 50 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, விசாரணைக்குப் பிறகு அந்த லாக்கரை அதிகாரிகள் முடக்கி ‘சீல்’ வைத்தனர். லாக்கரில் இருந்த 50 பவுன் நகைகளும் தனது சகோதரிக்கு சொந்தமானவை என பெபீஷ் விசாரணையின்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும், முகமது ரியாஸ் அமைச்சராக இருந்த காலத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் ஹவாலா பணம் குறித்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.