பாகிஸ்தான் போலீஸ் சோதனைச் சாவடி மீது டிரோன் தாக்குதல்: 11 போலீசார் உயிரிழப்பு
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஹங்கு மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது நள்ளிரவில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.காவல்துறையின் தகவலின்படி, வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட 'குவாட்காப்டர்' (Quadcopter) வகை டிரோன்களை பயன்படுத்தி முதலில் சோதனைச் சாவடி மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர்.இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் 11 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் நடத்திய பதிலடி நடவடிக்கையில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.