நேபாள வெள்ளத்தில் 288 இந்தியர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மிகப்பெரிய பனிப்பாறை சரிந்து போதேகோசி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேகமாக பெருக்கெடுத்த வெள்ளத்தில் ஆற்றின் கரையோரத்தில் இருந்த கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேபாளத்திற்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.இந்நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி 288 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காணாமல் போன 288 இந்தியர்களின் நிலை தொடர்பாக இதுவரை உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றார்.
அவர்களில் ‘திரிசூலி ஒன்’ (Trishuli One) மின் திட்டத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்களும், சுற்றுலா சென்ற குழுக்களைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகத் தெரிவித்தார்.காணாமல் போன இந்தியர்கள் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காக, காத்மாண்டுவில் செயல்படும் இந்திய தூதரகம் நேபாள அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்கள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா நேபாளத்திற்கு முழு ஆதரவுடன் துணை நிற்பதாகவும், அந்நாட்டின் தேவைக்கு ஏற்ப தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.