நாகையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோவில் குடமுழுக்கு விழா
நாகை ஆரியநாட்டு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து, பணிகள் நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதற்கு முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியுடன் புனித தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து 24-ம் தேதி முதல் இன்று காலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
பூஜைகளின் நிறைவாக மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.இதையடுத்து காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் காலை 10.30 மணிக்கு அம்பாள் விமானம் மற்றும் மூலவர் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.