திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய இளைஞர், பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்ற ரூபன் (33), ஒரு குற்ற வழக்கு தொடர்பாக வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, தனது நண்பர் வெங்கடேஷுடன் மோட்டார் சைக்கிளில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.அப்போது எதிரே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், மாரி சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் இருந்து இறங்கிய அந்த கும்பல், மாரியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாரியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையில், தப்பிச் செல்ல முயன்றபோது பாகல்மேடு பகுதியில் சாலையோர வீட்டின் சுவரில் அந்த கார் மோதியது. இதையடுத்து, காரில் இருந்த கொலைக் கும்பலைச் சேர்ந்த 3 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து வெங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.காரில் இருந்த மேலும் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிய இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.