தமிழ்நாட்டில் யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உத்தரவிடக் கோரி, விலங்குகள் நல ஆர்வலர் எஸ். முரளிதரன் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், யானைகள் வழித்தடங்களை அடையாளம் காண முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் இரண்டு குழுக்களை தமிழக அரசு அமைத்தது.இந்த நிலையில், வழக்கு நீதிபதிகள் என். சதீஷ்குமார், கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, தமிழக அரசு அமைத்த குழு இதுவரை அடையாளம் கண்டுள்ள 41 பகுதிகளையும் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் காண முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையிலான குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு மேலும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கியது.மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 4-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.