டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் வாங்கும் பணி இன்று முதல் நிறுத்தம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் 3 பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் கந்தவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை சேகரித்து, அவற்றை சுத்தம் செய்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பும் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆனால், வாகனங்கள் மற்றும் குடோன்களுக்கான வாடகை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி தொடர்பான குழப்பங்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்தத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜி.எஸ்.டி. வரியை மதுபான ஆலை உரிமையாளர்களே ஏற்க வேண்டும்.
மேலும், அபராத நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் அமைச்சர்கள், மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபாட்டில்களை வாங்கி, சுத்தம் செய்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பும் பணியை நிறுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.