சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்தைத் தொடர்ந்து பட்டாசு ஆலையில் தீப்பற்றியதால், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆலையின் உள்ளே வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதனிடையே, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.