சபரிமலைக்கு செல்ல திருநங்கைக்கு அனுமதி மறுப்பு:
காரணம் குறித்து விளக்கம் அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவுசெங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா. திருநங்கையான இவர், ஆவணி மாத பூஜையை முன்னிட்டு 41 நாட்கள் விரதம் இருந்து, கடந்த 20-ந்தேதி சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றார். ஆனால் பம்பை பகுதியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், சபரிமலை செல்ல அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.இதையடுத்து சத்யஸ்ரீ சர்மிளா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த ஜனவரி 3-ந்தேதியும், ஏப்ரல் 15-ந்தேதியும் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தாம் திருநங்கை என்பதைக் காரணமாகக் கூறி போலீசார் சபரிமலை செல்ல அனுமதி மறுத்துள்ளதாகவும், எனவே சபரிமலை தரிசனத்திற்கு தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சபரிமலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.