ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை (செப்டம்பர் 18) நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் அறிமுகமாகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். அதன்பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுதல் தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் பயின்றுள்ளார். இதற்கு முன்பு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’யும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. விவேக் எழுதிய வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா குரல் கொடுத்துள்ளார். இதனிடையே, ‘சிக்மா’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை (செப்டம்பர் 18) நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.