கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு!
கொலம்பியாவின் மேற்கு பகுதியில் சான் ஜோஸ் டெல் பால்மரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பொகோட்டாவில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தது. பொகோட்டாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டதால், எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 570 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், காலி நகரில் உள்ள மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.
நிலைமையை சமாளிக்கும் வகையில் கொலம்பியா அரசு தேசிய பேரிடரை அறிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு தேவையான உதவிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிரமாக வழங்கி வருவதாக கொலம்பியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான அமெரிக்கர்கள் கொலம்பியாவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.