கல்லூரிக்குச் சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரெயில் மோதி மாணவி பலி
சென்னை குரோம்பேட்டையில் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலேயே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி, விரைவு ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையைச் சேர்ந்த ராஜஸ்ரீ (18) என்ற மாணவி, குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் புதிதாக சேர்ந்திருந்தார். இன்று திங்கட்கிழமை கல்லூரியின் முதல் நாள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், கல்லூரிக்கு அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளார்.அப்போது ரெயில் தண்டவாளத்தை கடக்க மாணவி முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சென்னை நோக்கி வேகமாக வந்த விரைவு ரெயில் எதிர்பாராதவிதமாக ராஜஸ்ரீ மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கல்லூரியின் முதல் நாளன்றே மாணவி ரெயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.