கரூர் கூட்டநெரிசை வழக்கு: 31 குடும்பங்களுக்கு அரசு வேலை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு – 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கரூரில் நடைபெற்ற கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, வரும் 14-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.அதன்படி, முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணி நியமன ஆணைகளை கடந்த ஜூலை 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.இந்த அரசு பணி வழங்கும் நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகள் கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அரசு வேலை வழங்கப்பட்ட 31 பேரின் தரப்பு கருத்துகளை ஐகோர்ட்டு முழுமையாக கேட்கவில்லை என்றும் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு இறுதி முடிவுக்கு வரும் வரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலைகளை ரத்து செய்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் செல்வகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் அன்றைய தினம் விசாரிக்கப்பட உள்ளன. இதேபோல், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கும் அதே நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.