எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம்: சட்டசபையில் மீண்டும் அனல் பறந்த விவாதம்
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது தொடர்பாக மீண்டும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கூறினார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்து பணியாற்றுவதற்காகவே அரசு வாகனம் வழங்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், அரசு வழங்கும் வாகனத்தில் எம்.எல்.ஏ.க்கள் செல்லும்போது அதற்கென தனி மரியாதை கிடைக்கும் என்றார். மேலும், தி.மு.க. ஆட்சியில் கார் பந்தயத்துக்காக ரூ.24 கோடி செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த பணம் யாருடையது என்றும் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலடி கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு, செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடியை எந்தப் பணிக்கும் பயன்படுத்தாமல் வைத்திருந்ததாக கூறினார். எனவே, தாங்களும் அதேபோல் செயல்பட வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அரசு வாகனம் தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்றார். மேலும், தி.மு.க.
தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவின்படி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம் என தெரிவித்தார்.இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதிலளிக்கையில், தி.மு.க. உறுப்பினர்கள் தங்களுக்கு சொந்தமாக வசதி இருப்பதால் அரசு கார் தேவையில்லை எனக் கூறுவதாக தெரிவித்தார். எனவே, சொந்த வாகனம் இல்லாத எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அரசு வாகனத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், சொந்த கார் வைத்திருப்பவர்கள் அதிலேயே சென்று தொகுதி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்.தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், அரசிடம் நிதி இல்லை என்பதால்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க வேண்டாம் என தி.மு.க.வினர் கூறுவதாக விமர்சித்தார். கடந்த ஆட்சியில் கலைஞர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிட்டபோது மட்டும் நிதி இருந்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பதிலளித்தார். கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், தற்போதைய சூழலில் அது தேவையா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீரான பின்னர் அதனை அமைத்துக்கொள்ளலாம் என்றும், இப்போது வேண்டாம் என்றும் தெரிவித்ததாக கூறினார்.இதனால், எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கும் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் மீண்டும் காரசாரமான விவாதம் நடைபெற்றது.