உலக மக்களின் நலனுக்காக நடைபெற்ற ஆடி அமாவாசை யாக பூஜை
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை அமைந்துள்ளது. இந்த சபையின் சார்பில், உலக மக்களின் நலன் வேண்டி ஆடி அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜை நடைபெற்றது.
யாக பூஜைக்கு ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை வகித்து நடத்தி வைத்தார்.இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன் மற்றும் நரசிங்க பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாக குண்டத்தில் அதிகளவில் மிளகாய் வற்றல் சேர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடைபெற்றது.திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், கமுதி, உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்த பக்தர்கள் இணையதளம் வாயிலாக யாக பூஜையில் கலந்து கொண்டனர்.மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி யாக குண்டத்தில் செலுத்தி பிரார்த்தனை செய்தனர். இந்த பூஜையின் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம், செல்வ வளம், குடும்பத்தில் அமைதி, திருமண யோகம், குழந்தை பாக்கியம் மற்றும் முன்னோர்கள் வழி பாவங்கள் நீங்கும் என தெரிவிக்கப்பட்டது.இதற்கு முன்னதாக, கோவிலின் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கப்பட்டு அமாவாசை கோ பூஜை நடைபெற்றது. இறுதியாக யாக பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.