‘மாணவர்கள் முன்னின்றால் மட்டுமே போராட்டங்கள் வெற்றி பெறும்’ – இயக்குநர் வெற்றிமாறன்
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கும், நீட் தேர்வில் தோல்வியால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ஆம் தேதி அக்கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியை நடத்தினர். இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். பேரணியை தடுக்க பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இருப்பினும் கூட்டம் அதிகரித்ததால் தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பதிலாக சிலர் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.போலீசாரின் தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரவலான எதிர்ப்பை கிளப்பியது.டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், நீட் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராகவும் பல மாநிலங்களில் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதன்படி, சென்னை தியாகராய நகரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நேரில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:“மாணவர்கள் முன்னின்று பங்கேற்காத எந்தப் போராட்டமும் வெற்றியை அடையாது. போராடுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த போராட்டத்தின் திசையை வேறு யாரும் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.