தடுப்பு சுவரில் மோதி தீப்பற்றிய சொகுசு பேருந்து: குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
வியட்நாமின் லம் டாங் மாகாணத்திலிருந்து ஹோ சி மின் நகரை நோக்கி 33 பயணிகளுடன் நள்ளிரவில் புறப்பட்ட சொகுசு பேருந்து, அதிகாலை டாங் நெய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கடுமையான விபத்தில் சிக்கியது.பேருந்தை இயக்கிய ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையோர தடுப்பு சுவரில் பலத்த வேகத்தில் மோதியது. மோதலின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதியில் தீப்பற்றிய நிலையில், சில நிமிடங்களிலேயே தீ முழு வாகனத்தையும் சூழ்ந்தது.திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரமாக வெளியேற முயன்றனர்.
பலர் தப்பியோடிய நிலையில், பேருந்திலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கிய 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.