தஞ்சாவூர் இளைஞரை காவல்துறையினர் அச்சுறுத்தியது ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்
தஞ்சாவூரில் அனுமதியின்றி நடைபெற்ற சாலை மறியலின்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக, காவல்துறையினர் இளைஞர் ஆகாஷை அச்சுறுத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களிடம் வழிவிடுமாறு ஆகாஷ் கேட்டதாகவும், இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தச் சூழலில் காவல்துறையினர் ஆகாஷை தாக்க முயன்றதாகவும், அதற்கு எதிர்வினையாக அவர் சிறப்பு உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்ததாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரின் செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சாலை மறியலை காவல்துறையினர் முதலில் அகற்றியிருக்க வேண்டும் என்றும், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தால் பொதுமக்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.காவலர்கள் மீது வன்முறை நடத்துவதை நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், அதே நேரத்தில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்காக அவர்களை அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.
இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும், பல காவலர்கள் சேர்ந்து ஆகாஷை பிடித்து காவல் வாகனத்தில் ஏற்றிய சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், அந்த இளைஞரின் உயிர், உடல்நலம் மற்றும் உடைமைகளுக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். "தஞ்சாவூர் இளைஞரை காவல்துறையினர் அச்சுறுத்தியது ஏற்க முடியாது - நயினார் நாகேந்திரன்"