‘தி பாரடைஸ்’ - நானியுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ்... என்ன ரோல் தெரியுமா?
நடிகர் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ், ‘தசரா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். ஆனால், இந்த முறை கதாநாயகியாக அல்ல; சிறப்புப் பாடல் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடனமாடியுள்ளார்.2023-ம் ஆண்டு நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் நானியின் 33-வது படமாக ‘தி பாரடைஸ்’ உருவாகியுள்ளது. எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திலும் நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.அனிருத் இசையமைக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என 8 மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.
மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில், ‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்துக்காக ‘யேஷானகுலா’ (Yeshanagula) என்ற பாடலில் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் நாளை வெளியாகவுள்ளது.படப்பிடிப்பு தளத்தில் நானியுடன் எடுத்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நானியின் தலைமுடியைத் தொட்டால் அவர் கோபப்படுவார் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ள அவர், ‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் மீண்டும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.