சிவந்தாகுளம் டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி சி.பி.எம். காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.சிவந்தாகுளம் 5-வது தெருவில் உள்ள இந்த டாஸ்மாக் கடை காரணமாக, அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி நகரக் குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் முத்து பங்கேற்று கோரிக்கையின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்ச்சுனன், ராஜா, மூத்த நிர்வாகிகள் பொன்ராஜ், மணவாளன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி உதவி கலெக்டர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, அந்த உறுதியை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது காத்திருப்பு போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து சென்றனர்.