குஜராத்தில் கனமழை பாதிப்பு தீவிரம்: 22 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
குஜராத் மாநிலத்தின் தெற்கு பகுதிகளான வல்சாத், சூரத் மற்றும் நவ்சாரி மாவட்டங்களில் புதன்கிழமை முதல் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வல்சாத் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக அம்பர்கான் தாலுகாவில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை மாலை வரை 36 மணி நேரத்தில் 1,200 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், நவ்சாரி மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நவ்சாரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 50-க்கும் மேற்பட்டோர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வல்சாத் மாவட்டத்தில் 1,200-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவற்றுடன், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் ராணுவமும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வல்சாத் மாவட்டத்தின் வாபி பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் வெள்ளநீரில் மூழ்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தெற்கு மாவட்டங்களைத் தவிர, அகமதாபாத் மற்றும் கேடா மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. அகமதாபாத் மாவட்டத்தின் தோல்கா வட்டத்தில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரத்தில் 339 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரின் பல குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மழையால் பாதிக்கப்பட்டஅனைத்துமாவட்டங்களிலும்இன்றுபள்ளிமற்றும்கல்லூரிகளுக்குவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடனும் பூபேந்திர படேல் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, குஜராத் அரசுக்கு தேவையான முழு ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று அமித்ஷா உறுதி தெரிவித்தார்.