இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் தகராறு; வாலிபர் வெட்டிக்கொலை
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே இறுதி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்தூர் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அகரம் கிராமத்தில் திரண்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானதால், அருகில் இருந்தவர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் உயிரிழந்த பெண்ணின் உடல் தகனம் செய்வதற்காக அகரம் சுடுகாடு பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.சுடுகாடு அருகே சில இளைஞர்கள் ஒரு புறமாக மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அங்கு இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், அகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை ஒரு தரப்பினர் கத்தியால் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு சுடுகாடு பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, மயங்கிய நிலையில் கிடந்த மணிகண்டனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனை வெட்டிக் கொன்றதாக கூறப்படும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.