இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; ருமேனிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு
ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணத்தின் முதல் கட்டமாக கடந்த 20-ஆம் தேதி மால்டோவா சென்ற அவர், அந்நாட்டு ஜனாதிபதி மயா சந்து மற்றும் துணை பிரதமர் மைஹை பாப்சொய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 21-ஆம் தேதி வடக்கு மாசிடோனியாவுக்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அந்நாட்டு ஜனாதிபதி சில்ஜனொவ்ஸ்கா டவொகாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று ருமேனியா சென்ற ஜனாதிபதி முர்மு, அந்நாட்டு ஜனாதிபதி நிகோசர் டென்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இன்று நடைபெற்ற இந்தியா–ருமேனியா தொழிலதிபர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.அப்போது உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ருமேனிய நிறுவனங்கள் பங்கெடுத்து, நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்தியாவில் உள்ள பரந்த முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.