அமர்நாத் யாத்திரை முடித்து திரும்பிய பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து; 36 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அருகே, கடல் மட்டத்திலிருந்து 12,730 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரையில் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு கனமழையால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் சூழ்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் யாத்திரை மீண்டும் தொடங்கியது.இந்த நிலையில், இன்று காலை காந்தர்பால் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 36 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த அனைத்து பயணிகளையும் மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட தகவலில், அமர்நாத் தரிசனத்தை முடித்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தரமான மருத்துவச் சிகிச்சையும் கிடைப்பதை உறுதி செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.