அசாமில் வெள்ளம் தீவிரம்; 1.7 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் பல மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1.7 லட்சம் மக்கள் வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.தொடர்ந்து பெய்த மழையால் பல ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தின் அம்குரி பகுதியில் வெள்ளநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார்.இதுகுறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.அசாமுடன் எல்லை பகிரும் நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசத்திலும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆறும் அதன் கிளை ஆறுகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சராய்தியோ மாவட்டத்தின் தேசங்பானி பகுதியில் அமைந்துள்ள தேசங் ஆற்றில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நீர்மட்டம் 106.36 மீட்டராக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் வெள்ள அபாயம் நிலவுகிறது.அதேபோல், திப்ரூகர் மாவட்டத்தின் செனிமரி பகுதியில் உள்ள புரிதெஹிங் ஆற்றில் நீர்மட்டம் 102.66 மீட்டராக உயர்ந்துள்ளது. கவுரங், திகோவ், தன்சிரி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாயம் நீடித்து வருகிறது.தற்போது 30 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 580 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.