விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள ஈத்தங்காட்டைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன், தனது வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ஆம் தேதி அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.அதன்பிறகு, கடந்த 13-ஆம் தேதி சிறையிலேயே சபரிவர்மன் உயிரிழந்தார். விசாரணையில், மூன்று சிறை வார்டன்கள் மற்றும் எட்டு விசாரணைக் கைதிகள் இணைந்து அவரது கை, கால்களை கட்டிவைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகர்கோவில் சிறையின் வார்டன், தலைமை வார்டன், சிறைக் காவலர் மற்றும் எட்டு கைதிகள் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய எட்டு கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினர்.இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கைதிகளில் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், சம்பவம் நடைபெற்ற நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, சபரிவர்மன் உயிரிழந்த அறையிலிருந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர்.இந்த வழக்கில் மேலும் ஒரு முக்கிய தகவலாக, சபரிவர்மனின் செல்போன் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த செல்போனில் முக்கியமான வீடியோ ஆதாரங்கள் இருக்கக்கூடும் என கூறப்படுவதால், அது யாரிடம் உள்ளது என்பதை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்படி, வழக்கின் அனைத்து ஆவணங்களும் நேசமணிநகர் போலீசாரிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணையை தொடங்கினர். துணை போலீஸ் சூப்பிரண்டு நவராஜ் ராஜ்குமார் தலைமையில், நெல்லை இன்ஸ்பெக்டர்கள் மரிய பிரான்சிகா, உலகராணி உள்ளிட்ட போலீசார் குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, நாகர்கோவில் மாவட்ட சிறைக்கு சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், சபரிவர்மன் அடைக்கப்பட்டிருந்த அறையை நேரில் பார்வையிட்டு தகவல்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற சிறை அறையை கேமரா மூலம் பதிவு செய்தனர்.இதனுடன், சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் சென்றுள்ளதால், விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.