லண்டனில் இருந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு புகார்... ஓய்வூதிய விவகாரத்தில் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனித்தாய், தனது ஓய்வூதிய பலன்கள் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில், கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலராக பணியாற்றும் முத்துக்குமார், ஓய்வூதிய தொடர்பான செயல்முறைகளுக்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, லண்டனில் பொறியாளராக பணியாற்றி வரும் சீனித்தாயின் மகன் சதீஷ், முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ள "லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்" என்ற தமிழக அரசின் வாட்ஸ்-அப் எண்ணை பயன்படுத்தி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.அந்தப் புகாரில், தனது தாயின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்குத் தேவையான தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்றிதழ்களை பெறுவதற்காக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டதாகவும், ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருந்தாலும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுவது தாமதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாத ஓய்வூதியம் விரைவாக கிடைக்கவும், வழங்கியதாக கூறப்படும் ரூ.40 ஆயிரத்தை மீட்டுத் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், புகார் தொடர்பாக திருமங்கலம் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, அதில் எந்த உண்மையும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தாம் யாரிடமும் பணம் கேட்டதில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.