ரெயில்வே போலீசாரை கத்தியால் தாக்கிய இணையத் தொடர் நடிகை கைது
மகாராஷ்டிராவில் ரெயில் பயணத்தின் போது ஏற்பட்ட தகராறில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தியதாக, இணையத் தொடர் நடிகை அந்தரா பானர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.தானே பகுதியைச் சேர்ந்த அந்தரா பானர்ஜி, இணையத் தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி அவர், ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு பயணம் மேற்கொண்டார்.தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்திருந்த அவர், ஏசி பெட்டியில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த இருக்கையை முன்பதிவு செய்திருந்த பயணிக்கும் நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வந்த ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் யாமினி காந்த் மிஸ்ராவுடனும் நடிகைக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது, அவர் கத்தியால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், நடிகை அந்தரா பானர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர்.