மேற்குவங்காளத்தில் ஓட்டலில் தீ விபத்து: 6 பக்தர்கள் உயிரிழப்பு
மேற்குவங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள தரபதி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலைச் சுற்றியுள்ள ஓட்டல்களில் தங்கி வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக உள்ளது.இந்த நிலையில், கோவிலுக்கு அருகில் செயல்பட்டு வந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், ஓட்டலில் தங்கியிருந்த 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.மேலும், 5-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், மின்கசிவே தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.