முன்னாள் முதல்-அமைசசர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’என்ற பெயரில் செயல்படும் என த.வெ.க. அரசு அறிவித்துள்ளது.கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை 2022 செப்டம்பர் 15-ஆம் தேதி, அப்போது முதல்-அமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, 2023 ஆகஸ்ட் 25-ஆம் தேதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 17.55 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, த.வெ.க. அரசு இந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. தனது கொள்கைத் தலைவரான தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு பெறுவார்கள்.
Advertisement
சமையலறை மற்றும் தேவையான உபகரணங்கள் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் 17 முதல் திட்டம் தொடங்கப்படும். மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 34.36 லட்சம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் பயனாளர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.இந்த நிலையில், இதுவரை ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என்ற புதிய பெயரை த.வெ.க. அரசு வழங்கியுள்ளது.தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அறிமுகப்படுத்தியவர். பின்னர், 1982-ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அனைத்து மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் அறிமுகமானது. அதன் பிறகு, மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி, அதற்கு புதிய பெயரையும் த.வெ.க. அரசு அறிவித்துள்ளது.