முதல்-அமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு: 12-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற செப்டம்பர் 12-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட முன்னேற்றக் கழகம், முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர், முரசொலி மாறன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தியாகத்தையும் பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பேசியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமணமாகி ஐந்து மாதங்களிலேயே 23 வயதில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் ஓராண்டு காலம் துன்பங்களை அனுபவித்த மு.க.ஸ்டாலினின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. மேலும், சட்டமன்றத்தின் மாண்பு, மரபு மற்றும் வரலாற்றுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த உரை அமைந்ததாகவும் கட்சி விமர்சித்துள்ளது. சட்டமன்றத்தில் சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, அவை சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்', 'ரீல்ஸ்' வடிவில் வெளியிடப்படுவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. பின்னர், அந்தப் பேச்சுகள் நேரலை மூலம் மக்களை சென்றடைந்த பிறகு, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.