போராட்டம் வாபஸ் பெற 3 முக்கிய கோரிக்கைகள் முன்வைத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்
நீட் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நாட்டின் கல்வி அமைப்பில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று "சலோ சன்சாத்" பேரணியை நடத்த அந்தக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜந்தர் மந்தரில் திரண்டனர்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்று 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
தடையை மீறி முன்னேற முயன்றவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இந்த மோதலில் போலீஸாரும் போராட்டக்காரர்களும் சேர்ந்த சிலர் காயமடைந்தனர்.இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்தை நிறுத்துவதற்காக அவர்கள் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தனர்.* நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
* நீட் தேர்வு தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
* கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்ய விரிவான சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என ஜே.பி. நட்டா தெரிவித்ததுடன், போராட்டத்தை கைவிடுமாறும் போராட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டார்.