பிரதமர் மோடியின் பதில் மிகவும் தாமதமாக வந்தது” - மிஸ் யுனிவர்ஸ் இந்தியா மணிகா விஸ்வகர்மா கருத்து
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026'அழகிப் போட்டியை முன்னிட்டு, போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களை 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025' பட்டம் பெற்ற மணிகா விஸ்வகர்மா மற்றும் அழகிப் போட்டி நிர்வாகக் குழுவின் இயக்குநர்நிகில் ஆனந்த் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மணிகா விஸ்வகர்மா, டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், மக்களின் பிரச்சினைகளை கேட்டு, அவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத்தான் அரசியல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றார்.மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அந்த விவகாரம் லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் வைத்திருந்த நம்பிக்கையை பாதித்ததாகவும் குறிப்பிட்டார்.தற்போது நடைபெறும் மாணவர் போராட்டம் நீதியை வலியுறுத்தும் ஒன்றாக இருப்பதால், அவர்களின் கோரிக்கைகளையும் குரலையும் அரசு முக்கியத்துவத்துடன் அணுக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அந்த பதில் மிகவும் தாமதமாக வந்துள்ளதாக மணிகா விஸ்வகர்மா கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தின் தொடக்கத்திலேயே அரசு இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.