பிரதமர் மோடிக்காக 1,100 சிறப்பு ராக்கிகளை தயாரித்த பிருந்தாவன கைம்பெண் தாய்மார்கள்
பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பின் அடையாளமாக, பிருந்தாவனத்தைச் சேர்ந்த கைம்பெண் தாய்மார்கள் 1,100 சிறப்பு ராக்கி கயிறுகளை தங்களது கைகளால் உருவாக்கியுள்ளனர்.
மதுராவில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க கோபிநாத் கோவிலில், சுலப் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது. சமூகத் தடைகளைத் தாண்டி ஒன்று கூடிய தாய்மார்கள், கிருஷ்ண பக்திப் பாடல்களுக்கு நடனமாடியபடி மகிழ்ச்சியுடன் ராக்கிகளை அலங்கரித்து, அவற்றை பொதியிட்டனர்.இந்த ராக்கிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் அழகாக அச்சிடப்பட்டு இடம்பெற்றுள்ளது. மேலும், பிருந்தாவனத்தைச் சேர்ந்த ஐந்து கைம்பெண் தாய்மார்கள் அடங்கிய குழு, இந்த 1,100 ராக்கிகளுடன் டெல்லிக்குச் சென்று, பிரதமரின் இல்லத்தில் நேரில் அவருக்கு ராக்கி கட்டத் திட்டமிட்டுள்ளது.பிரதமர் மோடியை தங்களது சகோதரராகக் கருதுவதாக தெரிவித்துள்ள அவர்கள், நாட்டின் மக்களையும் தங்களைப் போன்ற பெண்களையும் அவர் பாதுகாத்து வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.உச்ச நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், குடும்பத்தினராலும் சமூகத்தினராலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்துவரும் 1,500-க்கும் மேற்பட்ட தாய்மார்களின் நலன் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்களை இந்த தொண்டு நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்புகளை அனுப்புவதையும் அவர்கள் வழக்கமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.