போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி நிலமோசடி.. சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது
ராமநாதபுரம் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக சகோதரர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வாணிகிராமம் உசேனியா தெருவைச் சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மனைவி ஹாஜரா பானுவுக்கு வாணிகிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது.இந்நிலையில், ராமநாதபுரம் வெளிப்பட்டினம் தர்ப்பசயனம் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜாபர்அலி (58), அந்த நிலத்துக்கு போலியான பவர்பத்திரம் தயாரித்ததாக கூறப்படுகிறது. அந்த ஆவணத்தின் அடிப்படையில், நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன்களான சந்திரகுமார் (47), செந்தில்குமார் (49) ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக தெரிகிறது.இதையடுத்து, சந்திரகுமார் அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளார்.
செந்தில்குமார் நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்துள்ளார்.தனது நிலம் போலி ஆவணங்கள் மூலம் மேற்கண்ட 3 பேரால் அபகரிக்கப்பட்டதை அறிந்த ஹாஜரா பானு, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார்.அவரது உத்தரவின் பேரில், ராமநாதபுரம் நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஜாபர்அலி, சந்திரகுமார், செந்தில்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.