படிக்கச் சென்ற தைவானில் காதல்; தமிழக வாலிபர் மீது மோசடி புகார்
தைவானில் படிப்பதற்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், அந்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (32). எம்.எஸ்சி. பட்டதாரியான இவர், தத்துவவியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக கடந்த 2023-ம் ஆண்டு தைவான் சென்றார்.அங்கு டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய ஜோயிங்யிங்குக்கும், ஜெகதீஷுக்கும் இடையிலான நட்பு பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.முனைவர் பட்டப் படிப்பை முடித்ததும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் கூறியதை நம்பிய ஜோயிங்யிங், அவரது கல்விச் செலவுகள், தங்குமிடம் உள்ளிட்ட அன்றாட தேவைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜெகதீஷை தனது பெற்றோருக்கும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் தனியாக வீடு எடுத்து தம்பதியாக வசித்து வந்துள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு முனைவர் பட்டப் படிப்பை முடித்த ஜெகதீஷ், இந்தியாவுக்குச் சென்று தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துவிட்டு மீண்டும் வந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஊர் திரும்பியுள்ளார்.
ஆரம்பத்தில் ஜோயிங்யிங்குடன் செல்போனில் பேசி வந்த அவர், சுமார் 5 மாதங்களுக்கு முன்பு திடீரென அவருடனான தொடர்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் சந்தேகமடைந்த ஜோயிங்யிங், ஆன்லைன் வாயிலாக உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரஸ்வதியை அணுகி ஆலோசனை பெற்றுள்ளார். வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் தைவானில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து காரில் உடுமலை சென்றுள்ளார்.பின்னர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜோயிங்யிங் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகிய ஜெகதீஷ், தைவானில் தன்னை தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜெகதீஷுடன் எடுத்த புகைப்படங்களையும் போலீசாரிடம் ஆதாரமாக வழங்கியுள்ளார்.புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜோயிங்யிங்கை ஜெகதீஷ் ஏமாற்றியதாக உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்தனர்.பின்னர் அவர் உடுமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், ஜோயிங்யிங் மருத்துவப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.