பெங்களூரு ஒரே பள்ளியில் 500 மாணவர்களுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று
பெங்களூரு ரிச்சர்ட்ஸ் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளியில் 500 மாணவர்களும், 21 ஆசிரியர்களும் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகளால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மாணவர்களில் பலருக்கு தொடர்ந்து இருமல், சளி மற்றும் உடல்வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் நிலைமையை ஆய்வு செய்தது. அப்போது, பள்ளி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.பள்ளி வளாகத்திற்கு வெளியே சாலையோரக் கடைகளில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள குப்பைகளே மாணவர்களின் உடல்நல பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.