நெல்லையில் நினைவு பீடம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது
நெல்லை சந்திப்பு அருகே முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் சிவசக்தி சாலையில் ஊருடையான் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு இரு சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் முத்துராமலிங்க தேவரின் நினைவு பீடம் ஒன்று உள்ளது.இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த நினைவு பீடம் அருகே வந்த 2 மர்ம நபர்கள், அங்கு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தீப்பற்றிய நிலையில், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்த தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் மற்றும் திரி உள்ளிட்டவை கிடந்தன. விசாரணையில், மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, திரி பொருத்தி தீ வைத்து, அதனை நினைவு பீடம் மீது வீசியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசராஜாவின் மகன் ஆகாஷ்ராமதுரை (22), சந்தனக்குமார் (21) ஆகிய இருவரும் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே, இன்று அதிகாலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுபோலீசாரின்கண்காணிப்பில்இருந்தவர்கள்என்பதும்விசாரணையில்தெரியவந்துள்ளது.ஊருடையான் குடியிருப்பு பகுதியில் இரு சமுதாய மக்களின் குடியிருப்புகளுக்கு இடையே அரசுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் அந்த நிலத்தில் தனி உரிமை கிடையாது என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த இடத்தில் ஒரு தரப்பினர் கூரை அமைக்க முயன்றதாகவும், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.