நீலகிரி: மசினகுடி மலைப்பாதையில் இன்று முதல் சுற்றுலா வாகனங்களுக்கு தடை அமல்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் உள்ள கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளுக்கு செல்லும் சாலை, கடுமையான சரிவுகளும் 36 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளும் கொண்ட அபாயகரமான பாதையாக உள்ளது. இந்த வழியை பயன்படுத்தி வந்த வெளியூர் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கியதால் பாதுகாப்பு குறித்த கவலை தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்ளூர் மக்களைத் தவிர மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த சாலையை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், மசினகுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற இணைப்புச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கவும் நீதிமன்றம் அண்மையில் அறிவுறுத்தியது.இருப்பினும், இந்த உத்தரவு இதுவரை நடைமுறைக்கு வராமல் இருந்தது.
தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் தடை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, மசினகுடி, சிங்காரா, மாயார் மற்றும் விபூதி மலை பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்கள் இனி அனுமதிக்கப்படமாட்டாது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இந்த மலைப்பாதைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும், உள்ளூர் மக்களின் வாகனப் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்றும் தெரிவித்தனர்.