நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகிலுள்ள ஈத்தங்காட்டைச் சேர்ந்த 33 வயதான சபரிவர்மன், மாற்றுத்திறனாளி வியாபாரியாக இருந்து தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்ததாகக் கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த 9-ஆம் தேதி அவரை கைது செய்து நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.அதனைத் தொடர்ந்து, கடந்த 13-ஆம் தேதி சிறைக்குள் சபரிவர்மன் தாக்கப்பட்டு உயிரிழந்தார். விசாரணையில், மூன்று சிறை வார்டன்கள் மற்றும் எட்டு விசாரணைக் கைதிகள் இணைந்து, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமை வார்டன், வார்டன், சிறைக் காவலர் உள்ளிட்ட மூன்று சிறை ஊழியர்களையும், எட்டு கைதிகளையும் சேர்த்து மொத்தம் 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய எட்டு கைதிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, பின்னர் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினர்.இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கைதிகளில் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய மூவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுஅதேநேரத்தில், சபரிவர்மன் உயிரிழந்த நாகர்கோவில் சிறையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற அறையில் இருந்து தடயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் சேகரித்தனர்.மேலும், சபரிவர்மனின் செல்போன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அந்த செல்போனில் முக்கியமான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுவதால், அது தற்போது யாரிடம் உள்ளது என்பதை கண்டறிய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த நிலையில், சபரிவர்மன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வழக்கு விசாரணை கன்னியாகுமரி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நேசமணிநகர் போலீசார் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அவற்றை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.முதற்கட்டமாக, சபரிவர்மனின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், கைது செய்யப்பட்ட சிறை வார்டன்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.