திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கிய ஆந்திர பக்தர் உயிரிழப்பு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் குகை வடிவிலான குறுகிய வழித்தடம் உள்ளது. இதில் மூன்று வாசல்கள் அமைந்துள்ள நிலையில், பக்தர்கள் பின்புற வாசல் வழியாக படுத்தபடி உள்ளே சென்று, கைகளை ஊன்றியபடி மெதுவாக நகர்ந்து முன்புற வாசல் வழியாக வெளியே வருகின்றனர். குகையை விட்டு வெளியே வந்ததும் நந்தி சிலை அமைந்துள்ளதால், பக்தர்கள் நந்தியையும் இடுக்கு பிள்ளையாரையும் தரிசித்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.இந்த குகை வழியாக சென்று வழிபடுவதற்காக தினமும் ஏராளமான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் கிரிவலம் வந்திருந்தார். பின்னர் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை வழியாக படுத்தபடி உள்ளே நுழைந்தார்.உடல் பருமன் அதிகமாக இருந்ததால், குகைக்குள் சிக்கிய அவர் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் போராடி அவரை வெளியே மீட்டனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, உடல் பருமன் அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலின் குறுகிய குகைப் பாதையில் நுழைவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.