திருநெல்வேலியில் அரிவாள் தாக்குதல் வழக்கு: குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞரை அரிவாளால் தாக்கி காயப்படுத்திய வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்தச் சம்பவம் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. முன்விரோதம் காரணமாக தருவை பகுதியைச் சேர்ந்த 32 வயதான பாலசுப்பிரமணியனை, அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான காளி என்கிற காளிராஜ் அரிவாளால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்போது சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கணேசன் விசாரணை நடத்தி காளிராஜை கைது செய்தார்.விசாரணை நிறைவடைந்த பின்னர் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றம் (எண்–V) வழக்கை விசாரித்து வந்தது.
வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, நீதிபதி ராணி, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 324-ன் கீழ் காளிராஜுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைத்த சேரன்மகாதேவி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், முன்னீர்பள்ளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, விசாரணை மேற்கொண்ட முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (தற்போது ஓய்வு), விசாரணைக்கு துணைநின்ற ஏட்டு மாணிக்கராஜா மற்றும் அரசுத் தரப்பில் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் அபிதா ஆகியோருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டு தெரிவித்தார்.