தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு: செயற்குழுவில் தீர்மானம்
சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு பதிலாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது.குறிப்பாக, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியைச் சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.இந்த நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.அதில், தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 75-ல் இருந்து 110 ஆக அதிகரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரையிலான பதவிகளுக்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி, கிளைச் செயலாளர் பதவிக்கு 45 வயதும், வட்டச் செயலாளர் பதவிக்கு 50 வயதும், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயதும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறையின்படி, 70 வயதை கடந்துள்ள 13 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், கட்சியில் எந்தப் பொறுப்பாக இருந்தாலும் ஒருவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்றும் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து முடிவுகளும் அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.