தலைப்பு: மின் கணக்கீட்டு குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும்: தமிழக அரசை வலியுறுத்திய டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், தமிழகத்தில் மின் விநியோகம் மற்றும் மின் கட்டண கணக்கீடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசும் மின்வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனுடன், அண்மையில் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்திருப்பதாக நுகர்வோர் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இலவச மின்சாரத்திற்கான செலவையும் மறைமுகமாக மின் கட்டணத்தின் மூலம் மக்களிடமிருந்து வசூலிக்க முயற்சிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே பொருளாதார சுமையை எதிர்கொண்டு வரும்நிலையில்இந்தஆண்டில்மின்கட்டணம்உயர்த்தப்படாதுஎன்றுமுன்புதெரிவிக்கப்பட்டிருந்தாலும், மறைமுகமாக கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மின் கணக்கீட்டு முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக அதிகப்படியான மற்றும் தவறான கட்டணங்கள் விதிக்கப்பட்டிருப்பதை மின்வாரிய தலைமைப் பொறியாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், இதுவரை அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை நுகர்வோருக்கு திருப்பி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் இந்த குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, அவை சரிசெய்யப்படும் வரை மின் கட்டணம் வசூலிக்கப்படாது என மின்வாரியம் அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.மேலும், மின்சாரத்துறை அமைச்சர் நிர்வாக குறைபாடுகள் மற்றும் துறையில் நடைபெறும் முறைகேடுகளை சரிசெய்ய தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுவே மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மின்சாரத்துறை, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும், குழப்பமான கணக்கீடுகள் மூலம் மக்களை சுமையடையச் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழக அரசும் மின்வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது பதிவில் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.