தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும், ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த சூழலில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடனும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.மேலும், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.போராட்டத்தின் போது, மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "பிரதானை பதவி நீக்கம் செய்" (Barkhaast Karo Pradhan Ko) என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.