தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி, சிஎம்டிஏ ஒப்புதல், ஆர்டிஇ உள்ளிட்ட அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் சுமார் ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில், பி.டி. அரசகுமார் மற்றும் அவருடன் தொடர்புடைய சிலர், "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்" என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் டி.சி. இளங்கோவன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார், கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.
விசாரணையில், கடந்த 2024 முதல் பல்வேறு பள்ளி நிர்வாகிகளை அணுகி பணம் வசூலித்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி தொடர்பாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 61 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை பாதிக்கப்பட்ட 120 பள்ளி நிர்வாகிகள் உட்பட மொத்தம் 190 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (எ) ராஜா (39) மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோர், அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறியும் நடவடிக்கையையும் போலீஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.